செய்திகள்
விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய உடுமலை வனப்பகுதியில் புல் விதைகள் தூவ நடவடிக்கை
யானை, காட்டெருமை உள்ளிட்ட பெரிய வனவிலங்குகள் அதிகப்படியான பரப்பில் சுற்றும் திறன் கொண்டதால் அவைகள் இடம் பெயர்ந்து விடுகின்றன.
உடுமலை:
கோடைகாலத்தில் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் வறட்சி அதிகரித்து காணப்படும். குறிப்பாக வனங்களில் உள்ள மரங்கள், தாவரங்கள் காய்ந்தும், இலைகள் உதிர்ந்தும் விடுகின்றன. ஆற்றுப்படுகை ஒட்டிய பிற பகுதிகளில் ஓரளவு பசுந்தாவரங்கள் காணப்பட்டாலும் வன உயிரினங்களின் உணவு தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
யானை, காட்டெருமை உள்ளிட்ட பெரிய வனவிலங்குகள் அதிகப்படியான பரப்பில் சுற்றும் திறன் கொண்டதால் அவைகள் இடம் பெயர்ந்து விடுகின்றன. ஆனால் ஒரே பகுதியை வாழ்விடமாகக் கொள்ளும் மான், முயல் உள்ளிட்ட தாவர உண்ணிகள் பாதிக்கின்றன. மேலும் அவைகளைச் சார்ந்து வாழும் மாமிச உண்ணிகளும் இரை கிடைக்காமல் அவதிப்படுகின்றன.
இத்தகைய பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் மழைப்பொழிவின் போது புல் விதைகள் தூவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
புல் விதைகள் தூவும் பொருட்டு அவ்வப்போது வனத்தில் ஆங்காங்கே இருக்கும் களைச்செடிகள் அகற்றப்படுகின்றன. தற்போது அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நன்கு வளர்ச்சியடையும் புற்கள், தாவர உண்ணிகளுக்கு உணவாக பயன்படுவதுடன் மண் சரிவை தடுக்கிறது. மழையின் தாக்கம் அதிகரித்தால் மட்டுமே புற்களின் வளர்ச்சி நல்ல நிலையில் இருக்கும். எனவே மழை பொழிவை பொறுத்து புல் விதைகள் தூவப்படுகிறது என்றனர்.