கடையநல்லூர் விவசாயி கொலையில் 4 பேரை பிடித்து விசாரணை
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள திருவேட்டநல்லூர் பிள்ளையார் கோவிலை சேர்ந்தவர் திருமலைச் சாமி(வயது 65). விவசாயி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு சண்முகராஜ் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தோட்டத்திற்கு காவலுக்கு சென்ற அவரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இதுதொடர்பாக அவரது மனைவி சுப்புலெட்சுமி அளித்த புகாரின்பேரில் சொக்கம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
திருமலைச்சாமியை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் நிலத்தகராறு காரணமாக திருமலைச்சாமி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக அவரது உறவினர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.