செய்திகள்
பள்ளி

மாஞ்சோலையில் ஒரே ஒரு மாணவருக்காக திறக்கப்பட்ட அரசு பள்ளி

Published On 2021-01-20 07:40 GMT   |   Update On 2021-01-20 07:40 GMT
10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டதால் மாஞ்சோலை அரசு பள்ளியில் படிக்கும் ஒரே ஒரு மாணவருக்காக அந்த பள்ளி திறக்கப்பட்டது.
சிங்கை:

தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பின்னர் நேற்று முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 313 பள்ளிகள் திறக்கப்பட்டது.

அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கு மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய 4 பகுதிகளாக தேயிலை தோட்டம் உள்ளது.

இங்குள்ள தோட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பிற்காக மாஞ்சோலையில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. மொத்தம் 15 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 10-ம் வகுப்பில் ஒரே ஒரு மாணவர் படித்து வருகிறார். தலைமை ஆசிரியராக கோமதி மற்றும் 5 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டதால் மாஞ்சோலை அரசு பள்ளியில் படிக்கும் ஒரே ஒரு மாணவருக்காக அந்த பள்ளி திறக்கப்பட்டது.

குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வசதிகள் இல்லாததால் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் பள்ளிக்கு வந்தனர். தொடர்ந்து முதல் நாளில் பள்ளிக்கு வந்த 10-ம் வகுப்பு மாணவனுக்கு ஆசிரியர்கள் ஆலோசனைகள் வழங்கினர். இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:-

மாஞ்சோலை தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. எனவே குறைந்த அளவிலான மாணவ-மாணவிகளே பயின்று வருகின்றனர். ஒரு மாணவன் 10-ம் வகுப்பு படித்தாலும் கல்வி முக்கியம் என்பதால் பள்ளியை திறந்துள்ளோம்.

மலைப்பகுதி என்பதால் இங்கு அடிக்கடி யானைகள் நடமாட்டம் காணப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு மலைப்பாதையில் ஒற்றை யானை ஒன்று அரசு பஸ்சை வழிமறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.

பள்ளிகள் திறக்காமல் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் பள்ளி அருகே யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. நேற்றும் பள்ளி அருகே யானைகள் வந்ததிற்கான தடயங்கள் உள்ளது. யானைகள் வந்துவிடுமோ என்ற ஒருவித அச்சத்துடனேயே நாங்கள் பணியாற்றினோம்.

எனவே வனத்துறையினர் தேயிலை தோட்டங்களில் சுற்றித் திரியும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல் மாணவர்களும், எஸ்டேட் தொழிலாளர்களும் யானைகளை விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News