செய்திகள்
கைது

புதுப்பேட்டை அருகே ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை திருமணம் செய்த கொத்தனார் கைது

Published On 2020-09-13 12:20 GMT   |   Update On 2020-09-13 12:20 GMT
புதுப்பேட்டை அருகே ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை திருமணம் செய்த கொத்தனார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
புதுப்பேட்டை:

புதுச்சேரி மாநிலம் கரையாம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் மகன் பார்த்திபன் (வயது 37). கொத்தனார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பார்த்திபன் புதுப்பேட்டை அருகே உள்ள கயப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் கடந்த 20 நாட்களாக தங்கி இருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயதுள்ள மாணவியை சந்தித்து பேசி பழகி வந்தார். சம்பவத்தன்று திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பார்த்திபன், அந்த மாணவியை அழைத்து சென்று விட்டார். இதற்கிடையில் மகளை காணாமல் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

பின்னர் இது பற்றி அவரது தாய் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று புதுப்பேட்டை போலீசார் கண்டரக்கோட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக மாணவியுடன் பார்த்திபன் வந்தார். அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த மாணவி பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் அவரை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் ஆசை வார்த்தை கூறி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த கொத்தனார் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News