குழந்தை பராமரிப்பு
குழந்தைகளை பாதுகாப்போம்

குழந்தைகளை பாதுகாப்போம்

Published On 2022-03-21 03:33 GMT   |   Update On 2022-03-21 03:33 GMT
குழந்தைகளுக்கு போதிய வாய்ப்புகளும் உதவிகளும் அளித்து சிறந்த வாழ்க்கையை அமைத்து கொடுக்க அனைவரும் முன்வரவேண்டும். இதுவே வருங்கால தலைமுறைக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்கும்.
சர்வதேச சட்டத்தின் கீழ் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் குழந்தை என்று கருதப்படுகின்றனர். இது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவு ஆகும். குழந்தைகளுக்கான உரிமைகள் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் வரையறுக்கப்பட்டது. இவை பல நாடுகளில் சட்ட திருத்தங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தியாவை பொறுத்தவரை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எப்போதும் சட்டப்பூர்வமான உரிமைகளும், பாதுகாப்பும் பெற்ற தனிப்பிரிவி னராகவே கருதப்படுகின்றனர். இதனால்தான் 18 வயதானவர்களுக்கு மட்டுமே ஓட்டு உரிமை, வாகனம் ஓட்ட உரிமம், சட்டப்பூர்வமான ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் உரிமை ஆகியவை வழங்கப்படுகிறது.

குழந்தை பருவத்தில் கொடுமைக்கு உள்ளாவது, தவறாக பயன்படுத்தப் படுவது ஆகியவற்றில் இருந்து காப்பாற்றப்பட வேண்டியது அவசியம். இதற்கு காரணம் சமூகத்தில் பெரியவர்களைவிட அதிகமாக பாதிக்கப் படகூடிய பலவீனமான நிலையில் குழந்தைகளே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் சமூகம் மட்டுமின்றி அரசாங்கங்களின் நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கை இன்மை ஆகிய காரணங்களால் அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள். குழந்தைகள் அவர்களது பெற்றோரின் சொத்துக்களாக கருதப்படு கின்றனர். அவர்களுக்கு சட்ட ரீதியான உரிமைகள், பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஆகியவை தரப்பட வேண்டியது அவசியம். இதற்கு 18 வயதுக்கு கீழ் உள்ள அனைவரும் தகுதி வாய்ந்த வர்கள். அதில் சிலவற்றை காண்போம்...!

6 முதல் 14 வயது வரை உள்ளவர்கள் ஆரம்ப கல்வியை இலவசமாக பெறும் உரிமை (சட்டப் பிரிவு-21 ஏ), 14 வயது பூர்த்தியாகும் வரை தீங்கு விளைவிக்கும் சூழ்நிலையில் வேலை செய்ய தடை (சட்டப் பிரிவு-24) பொருளாதார நிலை காரணமாக வேறு வழியின்றி வயது அல்லது வலிமையை மீறிய பணிகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவது மற்றும் கொடுமைக்குள்ளாவது ஆகியவற்றுக்கு தடை (சட்டப் பிரிவு-39 இ), பாரபட்சமாக நடத்தப்படுவதற்கு எதிரான சமஉரிமை (சட்டப் பிரிவு-15), வலுக்கட்டாயமாக கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்படுவதில் இருந்து பாதுகாப்பு (சட்டப் பிரிவு-23) ஆகியவற்றை உதாரணமாக கூறலாம்.

இதுபோன்ற அரசியலமைப்பு சட்டங்களை தவிர குழந்தைகளின் நலனுக்காகவே குறிப்பிட்ட வகையில் பல்வேறு சட்டங்கள் இருக்கின்றன. சமுதாயத்தில் குழந்தைகளுக்கான நியாயமான மற்றும் சம அளவிலான உரிமைகளை பெறுவதை அந்தந்த நாடுகளின் அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா.சபை தெரிவித்து உள்ளது. சிவில், அரசியல், சமூக, பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு உரிமைகள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இதில் கல்வி கற்பதற்கான உரிமை, சமூக பாதுகாப்பு, கலாசாரம், போர் உள்ளிட்ட நெருக்கடி காலங்களில் சிறப்பு பாதுகாப்பு, எதையும் வெளிப்படுத்தும் உரிமை, தகவல்களை கேட்டு பெறும் உரிமை, மத நம்பிக்கை களை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்பட ஏராளமான உரிமைகள் உள்ளன.

குழந்தைகளின் வயது ஏறும்போது பல்வேறு நிலைகளில் முதிர்ச்சி அடைகின்றனர். இதற்கு அர்த்தம் 15 அல்லது 16 வயதை அடைந்தால் இனி அவர்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை என்பது அல்ல. குறிப்பாக அந்த வயதை அடைந்ததும் திருமணம் செய்து வைப்பது, பணிகளில் ஈடுபடுத்தப்படுவது போன்றவை அரங்கேறுகிறது. இது முற்றிலும் தவறானது. 18 வயது வரை அவர்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை அளிக்க வேண்டியது அனைவரது கடமை ஆகும். ஆண்றுதோறும் நவம்பர் மாதம் 20-ந்தேதியை குழந்தை உரிமை நாளாக உலக நாடுகள் கடைபிடித்து வருகின்றன. அன்றைய தினம் மட்டுமின்றி அனைத்து தினங்களிலும் குழந்தைகளுக்கு போதிய வாய்ப்புகளும் உதவிகளும் அளித்து சிறந்த வாழ்க்கையை அமைத்து கொடுக்க அனைவரும் முன்வரவேண்டும். இதுவே வருங்கால தலைமுறைக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்கும்.
Tags:    

Similar News