செய்திகள்
டயாலிசிஸ் எந்திரத்தை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

தமிழகத்தில் 100-ல் ஒருவருக்கே பாதிப்பு - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

Published On 2021-02-22 18:40 GMT   |   Update On 2021-02-22 18:40 GMT
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட 100 பேரில் ஒருவருக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் 8-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று அம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் அனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள ‘டயாலிசிஸ்’ எந்திரத்தை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை 8-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த மருத்துவமனையில் இதுவரை 8 இருதய மாற்று அறுவை சிகிச்சை உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகளை கையாண்டுள்ளது. புற்றுநோய்க்காக பல்வேறு உயர் தர சிகிச்சைகளும் இலவசமாக இந்த மருத்துவமனையில் செய்துள்ளனர். மேலும் பல்வேறு சிகிச்சைகளை செய்து வருகின்றனர்.

இந்திய அளவில் மராட்டியம், கேரளாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 100 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டால் அதில் 0.9 சதவீதம் பேருக்கும் மட்டுமே கொரோனா பாதிப்பு இருக்கும் நிலை இருந்து வருகிறது. பொதுமக்கள் தொடர்ந்து முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். முறையாக பின்பற்றாவிட்டால் மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தில் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுவரை தமிழகத்தில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 14 லட்சம் பேர் மீது ரூ.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லை பகுதிகளில் காய்ச்சல் குறித்த கண்காணிப்பை தீவிர படித்தி உள்ளோம். சென்னையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 140-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் கூட எங்கிருந்து இந்த பாதிப்பு ஏற்படுகிறது என கண்டறிந்து அங்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் இதுவரை 36 பயணிகளுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வருகிறார். தடுப்பூசிகள் பாதுகாப்பானது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

தமிழகத்தில் மதுரை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஆங்காங்கே காணப்படுகிறது. எனவே டெங்கு காய்ச்சலுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மருத்துவமனைகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கேரளா தமிழக எல்லையில் ‘தெர்மல் ஸ்கேனர்’ கொண்டு சோதனை செய்யப்படுகிறது. விமானம் மூலம் வருகிறவர்களுக்கு பயணம் செய்வதற்கு முன்னர் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் பாதிப்பு இல்லை என எடுக்க சொல்லி உள்ளோம். இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து வருகிறவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

நெல்லையை சேர்ந்த பலருக்கு மும்பையில் உறவினர்கள் மற்றும் தொடர்பு உள்ளது. எனவே மும்பையில் இருந்து வருகிறவர்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் நிகழ்ச்சிகளில் கட்சி தொண்டர்கள் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். 2-ம் முறை தடுப்பூசி உரிய நேரத்துக்குள் போட வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News