செய்திகள்
கோப்பு படம்.

மரக்காணத்தில் கத்திமுனையில் இளம்பெண் காரில் கடத்தல்

Published On 2021-04-30 22:43 GMT   |   Update On 2021-04-30 22:43 GMT
மரக்காணத்தில் கத்தி முனையில் இளம்பெண்ணை காரில் கடத்தி சென்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மகள் ஷகிலாதேவி (வயது 18). பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் ஷகிலாதேவி, பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை 4 மணி அளவில் 10 பேர் கொண்ட கும்பல் கத்தி, கம்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ராஜியின் வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் தூங்கிக் கொண்டிருந்த ஷகிலாதேவியை கத்தியை காட்டி மிரட்டி காரில் ஏற்றினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷகிலாதேவியின் பெற்றோர் கூச்சல் போட்டனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வருவதற்குள், மர்மநபர்கள் மின்னல் வேகத்தில் காரில் தப்பி சென்றனர். இதுகுறித்து மரக்காணம் போலீசில் ராஜி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மணி (24) என்பவர் ஷகிலாதேவியை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ள நினைத்த மணி, ஷகிலாதேவியின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள், பெண் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் மணி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஷகிலாதேவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷகிலாதேவியை கடத்தி சென்ற கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். கத்தி முனையில் இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் மரக்காணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News