செய்திகள்

ஆந்திரா முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி தம்பி திடீர் மரணம்

Published On 2019-03-15 10:58 GMT   |   Update On 2019-03-15 10:58 GMT
ஆந்திரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் தம்பி ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி இன்று மரணமடைந்தார்.
நகரி:

ஆந்திரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் தம்பி ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி. இவர் 2 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார். ஒரு முறை எம்.பி.யாகவும், ஒரு முறை எம்.எல்.சி.யாகவும், விவசாயத்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஐதராபாத்தில் கடந்த 4 நாட்களாக வேட்பாளர் தேர்வு நடைபெற்று வந்தது. வேட்பாளர் தேர்வு நிகழ்ச்சியில் ஜெகன்மோகன் ரெட்டியுடன் ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டியும் பங்கேற்றார்.

நேற்று காலை விவேகானந்த ரெட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் தனது சொந்த ஊரான கடப்பா மாவட்டம் புலிவேந்துலாவுக்கு திரும்பினார். அங்குள்ள வீட்டில் அவர் மட்டும் தனியாக தங்கி இருந்தார்.

இந்தநிலையில் இன்று அதிகாலையில் வீட்டுக்கு வேலைக்காரர்கள் வந்தனர். அப்போது விவேகானந்த ரெட்டி இறந்து கிடப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விவேகானந்த ரெட்டி இயற்கையாக மரணம் அடைந்துவிட்டதாக தகவல் பரவியது.

இதற்கிடையே அவரது உடலை பார்த்த போது தலையில் காயம் இருப்பது தெரியவந்தது. இதனால் சிறிது நேரத்தில் அவரது சாவில் மர்மம் இருப்பதாக தகவல் பரவியது.

இதுதொடர்பாக அவரது உதவியாளர் கிருஷ்ண ரெட்டி புலிவேந்துலா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் விவேகானந்த ரெட்டி தலையில் காயம் இருப்பதால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விவேகானந்த ரெட்டி உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். விவேகானந்த ரெட்டி இறந்த தகவல் அறிந்ததும் ஜெகன்மோகன் ரெட்டி அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோர் புலிவேந்துலா விரைந்துள்ளனர்.
Tags:    

Similar News