செய்திகள்
ராகுல் காந்தி

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் -பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்

Published On 2021-04-09 08:54 GMT   |   Update On 2021-04-09 08:57 GMT
தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு மோசமாக செயல்படுத்துவதன்மூலம், விஞ்ஞானிகள் மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்களின் முயற்சிகள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் தேவை அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஏன்? இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். 

கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு உதவ வேண்டும். வெளிநாட்டில் செயல்பாட்டிற்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி தரவேண்டும்.



தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு மோசமாக செயல்படுத்துவதன்மூலம், விஞ்ஞானிகள் மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்களின் முயற்சிகள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. தற்போதைய விகிதத்தில் தடுப்பூசி போடப்பட்டால், 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட பல ஆண்டுகள் ஆகும். இது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் இந்தியாவின் பொருளாதாரத்தையும் கடுமையாகக் வீழ்ச்சியடைய செய்யும்.

தேவைப்படும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில், ஒரு தனிப்பட்ட நபரின் புகைப்படத்தை வெளியிடுவதை தாண்டி, அதிகபட்ச தடுப்பூசிக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறி உள்ளார்.
Tags:    

Similar News