செய்திகள்
துள்ளிக்குதித்து வந்த காளையை அடக்கிய வீரர்கள்.

உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டு போட்டி- சீறிப்பாய்ந்த காளைகளை விரட்டிப் பிடித்து அடக்கிய வீரர்கள்

Published On 2021-02-17 06:57 GMT   |   Update On 2021-02-17 06:57 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சின்ன கட்டளையில் உள்ள கருப்பசாமி கோவில் விழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
உசிலம்பட்டி:

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் நடைபெறும்.

அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சின்ன கட்டளையில் உள்ள கருப்பசாமி கோவில் விழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இவர்களுக்கு முறையாக உடல்தகுதி பரிசோதனை செய்யப்பட்டது.

இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முதலில் வாடிவாசல் வழியாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து மற்ற காளைகளும் வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து வந்தன. ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் என களத்தில் இறக்கி விடப்பட்டனர்.

துள்ளிக்குதித்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் விரட்டிச் சென்று திமிலை பிடித்து அடக்கினர்.

சில காளைகள் களத்தில் நின்று வீரர்களுடன் போட்டி போட்டு விளையாடியது.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு சின்ன கட்டளைகள் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களுக்கு முதலுதவி அளிக்க மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News