செய்திகள்
திருவள்ளூர் அருகே ஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
திருவள்ளூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற தனியார் நிறுவன ஊழியர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த சென்னீர் குப்பத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் சிவகுமார் தனது நண்பர்களான மதன்ராஜ், குமரேசன் ஆகியோருடன் திருவள்ளூரை அடுத்த நேமம் ஏரியில் குளிப்பதற்காக சென்றார். சிவகுமார் ஏரியில் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். நீச்சல் தெரியாத அவர் ஏரியில் மூழ்கினார்.
இதை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக நேமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.