செய்திகள்
திருமூர்த்தி அணை பூங்காவில் சிதலமடைந்து கிடக்கும் சிலைகள்
சில ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித்துறை சார்பில் சிறிய பூங்கா அங்கு ஏற்படுத்தப்பட்டு குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் வைத்து கம்பி வேலியும் அமைக்கப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாய் அருகே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த தளி பாளையக்காரர் எத்தலப்பர் வம்சாவளியினர் சிலைகள் உள்ளன. அணை கட்டுமான பணிகளின் போது மீட்கப்பட்ட அச்சிலைகளை அங்கிருந்த ஆலமரத்தை சுற்றிலும் மேடை அமைத்து நிறுவி பராமரித்து வந்தனர்.
உடுமலை பகுதியில் நாட்டின் சுதந்திரத்துக்காக ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட வீர வரலாற்றின் ஆவணமாக இச்சிலைகள் நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சியளித்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித்துறை சார்பில் சிறிய பூங்கா அங்கு ஏற்படுத்தப்பட்டு குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் வைத்து கம்பி வேலியும் அமைக்கப்பட்டது.
ஆனால் போதிய பராமரிப்பின்றி விளையாட்டு சாதனங்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.இந்நிலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இச்சிலைகளுக்கு அரணாக இருந்த ஆலமரமும் பசுமையிழந்து கருகி வருகிறது. இதனால் திறந்தவெளியில் சிலைகள் சிதிலமடைய தொடங்கியுள்ளது. செடிகளும் அகற்றப்படாமல் அப்பகுதி புதர் மண்டி காணப்படுகிறது.
சுதந்திர போராட்ட வரலாற்றை போற்றும் வகையில் எத்தலப்பருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பிலும் இக்கோரிக்கை குறித்து அரசுக்கு தொடர்ந்து மனு அனுப்பப்பட்டு வருகிறது.