செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள எலசட்டியை சேர்ந்தவர் சின்னபிட்டப்பா (வயது 50). அதேபகுதியை சேர்ந்தவர் தொழிலாளி திவாகர் (25). மது போதையில் இருந்த திவாகருக்கும் சின்னபிட்டப்பாவிற்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சின்னபிட்டப்பா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் கொடுத்த புகாரில் திவாகர் மீது தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் திவாகர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திவாகர் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அவரது உடல் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் திவாகர் மரண வழக்கை போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த பிரேத பரிசோதனையில் திவாகர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தனது தந்தை சின்னபிட்டப்பாவை திவாகர் தாக்கியதை அறிந்த அவரது மகன் சந்தோஷ் (26) , எலசட்டியை சேர்ந்த ஆனந்த் (20) மற்றும் கெலமங்கலம் அடுத்த சக்கிலிபாளையத்தை சேர்ந்த மாதேஷ் (33) ஆகியோருடன் சேர்ந்து, திவாகரை கட்டி வைத்து அடித்ததும், அதில் படுகாயம் அடைந்த திவாகர் உயிரிழந்ததும் தெரிந்தது.
இதையடுத்து சந்தோஷ், ஆனந்த், மாதேஷ் ஆகிய 3 பேரையும் தேன்கனிக்கோட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.