செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி - புதிதாக 95 பேருக்கு பாதிப்பு
கடலூா் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். மேலும் புதிதாக 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 59 ஆயிரத்து 85 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 57 ஆயிரத்து 380 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்த நிலையில் 794 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட சிலரின் முடிவுகள் நேற்று வெளியானதில் புதிதாக 95 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் இருந்து மங்களூர், விருத்தாசலம் வந்த 2 பேர், தஞ்சாவூரில் இருந்து பண்ருட்டி வந்த ஒருவருக்கும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேருக்கும், நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 70 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 49 வயது ஆண், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமராட்சியை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.