செய்திகள்
மருத்துவமனைகளில் தீ தடுப்பு ஏற்பாடுகள்... மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு
மருத்துவமனைகளில் தீ தடுப்பு ஏற்பாடுகள் குறித்து தணிக்கை செய்வதற்காக குழுக்களை அமைக்கும்படி மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீவிபத்துகளில் நோயாளிகள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை கவனத்தில் கொண்டு, மருத்துவமனைகளின் தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று மாநில அரசுகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் உட்பட அனைத்து மருத்துவமனைகளின் தீ தடுப்பு ஏற்பாடுகளை தணிக்கை மேற்கொள்ளும் குழுக்களை அமைக்கும்படி, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தணிக்கை ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறி உள்ளது.
‘ஒவ்வொரு மாநில அரசும் மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்வதற்கு, ஒரு நோடல் அதிகாரியை நியமிக்க வேண்டும். கொரோனா சிறப்பு மருத்துவமனைகள், நான்கு வாரங்களுக்குள் அந்தந்த தீயணைப்புத் துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) பெற வேணடும். என்.ஓ.சி. காலாவதியான மருத்துவமனைகளும், நான்கு வார காலத்திற்குள் அதனை புதுப்பிக்க வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.