வழிபாடு
ஸ்ரீரங்கம், பரமபத வாசல்

கார்த்திகை மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி உற்சவம்

Published On 2021-12-14 07:52 GMT   |   Update On 2021-12-14 07:52 GMT
19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் வைகுண்ட ஏகாதசி விழா வந்துள்ளது.
வைணவ தலங்கள் பலவற்றில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா, பிரமாண்டமாக கொண்டாடப்பட்டாலும் வைகுண்ட ஏகாதசி என்றதும் திருச்சி ஸ்ரீரங்கமே நினைவுக்கு வரும். ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசிக்கு ஒரு வரலாறு உண்டு.

திருமங்கையாழ்வாரின் பக்தியிலும் திருப்பணியிலும் மகிழ்ந்தும் நெகிழ்ந்துமாகி நின்ற ஸ்ரீரங்கநாதர் அவர் முன்தோன்றி, “என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டாராம். அதற்கு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியைப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்காகத் திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதை ஏற்றுக் கொண்ட ஸ்ரீரங்கநாதரும் அப்படியே ஆகட்டும் என அருளினார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, கடந்த (டிசம்பர்) 3--ந்தேதி திருநெடுங்தாண்டகத்துடன் தொடங்கியது. மறுநாள் 4-ந்தேதி திருமொழி திருநாள் தொடங்கியது (பகல்பத்து உற்சவத்தின் முதல்நாள்). விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 14--ந்தேதி நடைபெற்றது. இன்று அதிகாலையில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

ஸ்ரீரங்கம் கோவிலை பொறுத்தவரை, பாஞ்சராத்ர ஆகமம் முறைப்படி, நாள், நட்சத்திரம், திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன. ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை மாதம் முன்கூட்டியே வரும் ஏகாதசி, கைசிக ஏகாதசி என அழைக்கப்படுகிறது. மார்கழியில் வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி எனப்படு கிறது. பொதுவாக, மார்கழி மாதத்திலேயே பகல் பத்து உற் சவமும், ராப்பத்து உற்வசமும் கொண்டாடப்படும்.

சில வேளை, மார்கழி மாத கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், மறுநாள் தைத்திருநாளும் வந்தால், தை பிரம்மோற்சவம் கொண்டாட ஏதுவாக, வைகுண்ட ஏகாதசி உற்சவம் கார்த்திகை மாதத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ளது. கார்த்திகை மாதத்தில்தான் பரமபத வாசலும் திறக்கப்படுகிறது. இது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிகழும்.

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக பிரதமை முதல் தசமி முடிய பத்து நாட்களும் பக்தர்கள் ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களைப் பாடுவார்கள். இந்த பத்து நாள் உற்சவம் அத்யயனோத்சவம் என்று அழைக்கப்படும். பகலில் நடப்பதால் பகல் பத்து உற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது.

கார்த்திகை மாதத்திலே ஸ்ரீரங்கத்திற்கு மட்டும் வைகுண்ட ஏகாதசி வரும். விஜயநகர பேரரசு காலத்தில் தைத்திருநாள் (தை பிரம்மோற்சவம்) ஏற்படுத்தப்பட்ட போது மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், தை முதல் பகுதியில் தைத் திருநாளும் வந்தால் எதைக் கொண்டாடுவது எப்படிக் கொண்டாடுவது என கேள்வி எழுந்து உள்ளது. இதையடுத்து ஸ்ரீ மணவாள மாமுனிகளின் நியமனத்தின் படி 19 வருடங்களுக்கு ஒரு முறை இந்த வைகுண்ட ஏகாதசி (பகல் பத்து, ராப்பத்து) திருவிழாவை கார்த்திகையில் பெரிய பெருமாளின் திருவுள்ளம் அறிந்து மாற்றியமைத்து ஏற்படுத்தினார்.

அன்று முதல் 19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் வைகுண்ட ஏகாதசி விழா வந்துள்ளது.
Tags:    

Similar News