செய்திகள்
அருள்முருகன்

சந்தன மரக்கட்டைகள் கடத்திய வாலிபர் கைது

Published On 2020-10-14 14:14 GMT   |   Update On 2020-10-14 14:14 GMT
வடமதுரை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தன மரக்கட்டைகள் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வடமதுரை:

வடமதுரையை அடுத்த தங்கம்மாபட்டி சோதனைச்சாவடியில் நேற்று காலை வடமதுரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டர் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் சந்தேகப்படும்படி வந்த வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்தனர். அவர் கொண்டு வந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தபோது, அதில் சந்தன மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அய்யலூர் வனத்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அய்யலூர் வனச்சரக அலுவலர் குமரேசன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், அய்யலூர் வடுகபட்டியை சேர்ந்த அருள்முருகன் (வயது 27) என்பதும், ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 15 சந்தன மரக்கட்டைகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அருள்முருகன் மீது ஏற்கனவே சந்தன கட்டைகளை கடத்திய வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News