ஆன்மிகம்
ஆங்கில புத்தாண்டு பிறப்பு: கோவில்களில் நாளை அதிகாலை விசேஷ பூஜை
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் நாளை விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன.
ஆங்கில புத்தாண்டு பிறப்பதையொட்டி புதுவையில் உள்ள பெருமாள், சிவன் கோவில்களில் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விசேஷ அபிஷேகம், அலங்காரத்துடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர், காந்தி வீதி வேதபுரீஸ்வரர், பாகூர் மூலநாதர், வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர், திருக்காஞ்சி காமாட்சி மீனாட்சி சமேத கங்கவராகநதீஸ்வரர், முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர், காந்தி வீதி பொன்னுமாரியம்மன், எம்.எஸ்.அக்ரகாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர், முத்தியால்பேட்டை கற்பக விநாயகர், வசந்த் நகர் வேலாயுத ஈஸ்வரர், கணபதி நகர் ஷீரடி சாயிபாபா, பெரிய ஆண்டவர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகின்றன.
அதேபோல் காந்தி வீதி வரதராஜபெருமாள், முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள தென்கலை சீனுவாச பெருமாள், முதலியார்பேட்டை வன்னியபெருமாள், பாகூர் லட்சுமிநாராயணா பெருமாள், மதிகிருஷ்ணாபுரம் பட்டாபி ராமர், திருபுவனை தென்கலை வரதராஜபெருமாள், வில்லியனூர் வரதராஜபெருமாள், காலாப்பட்டு சாயி பாபா கோவில் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் அரசு விதிகளுக்குட்பட்டு கோவில்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் கட்டாயமாகும்.