பணியில் சேர்ந்த 66 நாட்களில் கோவை மாநகராட்சி துணை கமிஷனர் இடமற்றம்
கோவை:
கோவை மாநகராட்சி துணை கமிஷனர் விமல்ராஜ் நேற்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவர் திருப்பூர் மாவட்ட நிலஎடுப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை டி.ஆர்.ஓவாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஜூலை 14-ந் தேதி கோவை மாநகராட்சி துணை கமிஷனராக பொறுப்பேற்றார்.
அப்போது மாநகராட்சி அலுவலங்களில் மாற்றுப்பணியாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் வாரிசு வேலைதாரர்களை, வார்டு அலுவலகத்துக்கு திருப்பி அனுப்பினார். இது மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உதவி கமிஷனர்களை மண்டலம் விட்டு மண்டலம் மாறுதல் செய்தார். மண்டல சுகாதார அலுவலர்களை மாற்றியதோடு சுகாதார ஆய்வாளர்களை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றினார். துறை ரீதியான ஆய்வு கூட்டத்தில் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதால் அலுவலர்கள் மத்தியில் புகார் எழுந்தது.
கட்டிட வரைபட அனுமதி கேட்டு சமர்ப்பித்த விண்ணப்பங்களை கிடப்பில் போட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் துணை கமிஷனரை பணியில் இருந்து விடுவிக்க நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தில் இருந்து மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று அறிவுறுத்தல் வந்தது. தொடர்ந்து நிர்வாக காரணங்களுக்காக துணை கமிஷனர் விமல்ராஜ் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் அறிவித்தார். விமல்ராஜ் மாநகராட்சி துணை கமிஷனராக 66 நாட்களே பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.