முக்கிய விரதங்கள்
விஷ்ணு

இன்று பசிப்பிணி நீக்கும் ‘ஷட்திலா’ ஏகாதசி

Published On 2022-02-26 00:36 GMT   |   Update On 2022-02-26 05:39 GMT
பெண்கள் மாதவிடாய் காலத்திலும், வீட்டில் பிறப்பு, இறப்பு போன்ற தீட்டு காலங்களிலும் கூட, ஏகாதசி விரதத்தை விடாமல் தொடரலாம்.
26-2-2022 மாசி மாத தேய்பிறை ஏகாதசி

பவுர்ணமி மற்றும் அமாவாசைக்கு பிறகான பதினொன்றாம் நாள் வரும் திதி, ஏகாதசி. இது மாதத்திற்கு இரண்டு என்று, வருடத்திற்கு 24 ஏகாதசிகளாக வரும். சில வருடங்களில் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. ஏகாதசி விரதத்தை ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் மேற்கொள்ளலாம். முக்கியமாக, பெண்கள் மாதவிடாய் காலத்திலும், வீட்டில் பிறப்பு, இறப்பு போன்ற தீட்டு காலங்களிலும் கூட, ஏகாதசி விரதத்தை விடாமல் தொடரலாம். ஏகாதசிகளில் ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றாலும், ஒவ்வொரு ஏகாதசிக்கும் தனித் தனிச் சிறப்புகளும் உண்டு.

அந்த வகையில் மாசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசியான ‘ஷட்திலா’ ஏகாதசியைப் பற்றி இங்கே பார்ப்போம்.

ஏகாதசி தினத்தன்று பெருமாளை நோன்பிருந்து வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். இந்த ஷட்திலா ஏகாதசி அன்று, விரதம் இருந்து இறைவனுக்கு கொய்யாப்பழம் படைத்து வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும். அதோடு இந்த ஏகாதசியில் ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும், காலணி, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக் குடம், பசு ஆகிய 6 பொருட்களில் ஏதாவது ஒன்றை தானமாக வழங்கினால், பிரம்மஹத்தி தோஷம் கூட நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

மேலும் பசியால் வாடுபவர்களுக்கு அன்னதானம் செய்தால், நமக்கு அடுத்து வரும் சந்ததியினர் வறுமை, பசி இன்றி சுமுகமான வாழ்க்கையை வாழ்வார்கள். மாசி மாத தேய்பிறை ஏகாதசி வழிபாடு, முன்னோர்களின் முக்திக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் விரதமாகும். அகால மரணமடைந்தவர்கள் மோட்சம் பெற, மாசி மாத தேய்பிறை ஏகாதசி வழிபாடு உதவும். ஏகாதசி அன்று பெருமாளை வழிபாடு செய்ய, சிறப்பான பூஜைகளை மேற்கொள்வது நல்லது.

ஆனாலும் இயலாதவர்கள் ஏகாதசி அன்று உண்ணாமல் விரதம் இருப்பதால், உடல் சோர்வை அதிகரித்துக்கொள்ளாமல் வீட்டிலேயே இறைவனை தியானித்து, விஷ்ணு புராணம், பாகவதம் போன்றவற்றை படிக்கலாம். உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக கொண்டு, பரமாத்மாவை மனதில் உருவேற்றிக் கொண்டே இருந்தால் விஷ்ணுவின் அருளைப் பெறலாம்.
Tags:    

Similar News