வழிபாடு
அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை

தைப்பூசத்தையொட்டி வடலூர் சத்தியஞான சபையில் 17-ந்தேதி கொடியேற்றம்

Published On 2022-01-11 04:19 GMT   |   Update On 2022-01-11 08:32 GMT
18-ந்தேதி தைப்பூசத்தையொட்டி அன்று காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 ஆகிய நேரங்களில் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 151-வது தைப்பூச விழா 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை அகவல் பாராயணம் நடைபெறுகிறது. பின்னர் 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி, வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் மற்றும், தருமச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு சத்தியஞானசபையில் விழா கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து 18-ந்தேதி தைப்பூசத்தையொட்டி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அதன்படி அன்று காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 ஆகிய நேரங்களில் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

தொடர்ந்து 20-ந்தேதி பகல் 12 மணி முதல் மாலை வரை மேட்டுக்குப்பத்தில் உள்ள வள்ளலார் சித்திபெற்ற திருஅறைதரிசனம் நடைபெறுகிறது. முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டுசெல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும். தைப்பூச திருவிழாவையொட்டி வழக்கமாக நடைபெறும் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் ராட்டினம், சர்க்கஸ் கூடாரங்கள் உள்ளிட்டவை நடத்தவும் அனுமதியில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி தைப்பூச விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதில் மாற்றம் இருக்கலாம் என செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் தெரிவித்துள்ளார். விழாவையொட்டி வடலூர் ஞானசபையில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று (திங்கட் கிழமை) முதல் நாளை வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நிகழ்ச்சியும், 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஞானசபையில் அருட்பா முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News