செய்திகள்
கொள்ளை

மளிகை கடைக்குள் புகுந்து 2 ஊழியர்களை வெட்டி ரூ.15 ஆயிரம் கொள்ளை

Published On 2019-09-17 06:44 GMT   |   Update On 2019-09-17 06:44 GMT
மளிகை கடைக்குள் புகுந்து 2 ஊழியர்களை வெட்டி ரூ.15 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி மா.பொ.சி.நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் சீமா. கடையின் பின்புறத்திலேயே இவரது வீடும் உள்ளது.

இன்று காலை 6 மணியளவில் கடை வாசலில் 3 மோட்டார் சைக்கிள் வந்து நின்றன. அதில் வந்த 6 பேரில் 2 பேர் மட்டும் மளிகை கடைக்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடி பாட்டில்களையும், பொருட்களையும் வீச்சு அரிவாளால் அடித்து நொறுக்கினர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்களான பீகாரைச் சேர்ந்த பப்புளூ, மணீஸ் ஆகிய 2 பேரும் அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள் அரிவாளால் சரமாரியாக அவர்களை வெட்டினர். பின்னர் கடையில் இருந்த ரூ.15 ஆயிரத்தை அள்ளி தப்பி சென்று விட்டனர். அதிகாலையில் மளிகை கடை திறந்தவுடன் மர்ம ஆசாமிகள் கடைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டியில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளையர்கள் வெட்டியதில் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் அடைந்த கடை ஊழியர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News