தமிழ்நாடு
ஊட்டி மலை ரெயில்

ஊட்டி மலை ரெயில் சேவை 14-ந் தேதி வரை ரத்து

Published On 2021-12-05 09:55 GMT   |   Update On 2021-12-05 09:55 GMT
தொடர் மழை காரணமாக கல்லார் முதல் ஹல்குரோவ் ரெயில் நிலையம் வரை 3 இடங்களில் மண்சரிவு மற்றும் பாறை விழுந்து உள்ளதால் ரெயில் பாதை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.
காரமடை:

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இந்த மலை ரெயில் பாதை கல்லார் முதல் குன்னூர் வரை சுமார் 20 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழை காரணமாக பாறைகள் உருண்டு விழுந்ததால் ரெயில் பாதை சேதமானது. இதனால் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் சீரமைப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவ்வப்போது பெய்த மழை காரணமாக ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ரெயில் போக்குவரத்தை துவங்க முடியவில்லை.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக கல்லார் முதல் ஹல்குரோவ் ரெயில் நிலையம் வரை 3 இடங்களில் மண்சரிவு மற்றும் பாறை விழுந்து உள்ளதால் ரெயில் பாதை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.

தற்போது மலை ரெயில் பாதை அமைந்துள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்படும் நிலை உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ரெயில் போக்குவரத்தை வருகிற 14-ந் தேதி வரை ரத்து செய்து சேலம் கோட்ட ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து மலை ரெயில் பாதை சீரமைப்பு பணிகளில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News