செய்திகள்
லஞ்ச ஒழிப்பு சோதனை- இளங்கோவன் வீட்டில் இருந்து 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி பறிமுதல்
இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சேலம், சென்னை, நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் 36 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் முறைகேடான வகையில் பணம் வசூல் செய்ததாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை இளங்கோவனும், அவரது மகன் பிரவீன்குமாரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தினர்.
இந்த நிலையில், இளங்கோவன் வீட்டில் இருந்து 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும், ரூ.29.77 லட்சம் ரொக்கம், 10 சொகுசு கார்கள், 2 வால்வோ சொகுசு பேருந்துகள், 3 ஹார்டு டிஸ்க், சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இளங்கோவன் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், சேலம் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.