மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முதல் மீண்டும் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 5 ஆயிரத்து 269 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று இரு மடங்குக்கும் மேல் அதிகரித்து 12 ஆயிரத்து 848 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 12 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் அதே அளவு நீடிக்கிறது.
நேற்று 118.82 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 118.80 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.