வாழப்பாடி அருகே இரட்டை ஆண் குழந்தைகள் குட்டையில் மூழ்கி பலி
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் கல்வராயன்மலை கருமந்துறை அடுத்த குப்பூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தமிழரசன் (வயது 27). இவரது மனைவி ஈஸ்வரி (25). இவர்களுக்கு 3½ ஆண்டுகளுக்கு முன் இரட்டையர்களாக இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.
இந்த இரட்டை குழந்தைகளுக்கு துளசிராம், துளசிதரன் என பெயரிட்டு ஆசையோடு வளர்த்து வந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கலுடுவதற்காக நேற்று கணவன்-மனைவி இருவரும் தோட்டத்தில் விறகு சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது, 2 குழந்தைகளும் அருகிலுள்ள சேலத்தை சேர்ந்த டாக்டருக்கு சொந்தமான தோட்டத்தில் விளையாடினர். அப்போது எதிர்பாராதவிதமாக தோட்டத்தில் இருந்த குட்டையில் தவறி விழுந்து மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வெகுநேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பாததால் பெற்றோர் சென்று பார்த்த போது, 2 குழந்தைகளும் குட்டையில் மூழ்கி இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தமிழரசன் கொடுத்த புகாரின்பேரில் கருமந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 குழந்தைகளின் உடலையும் மீட்டனர். பின்னர் அந்த குழந்தைகள் உடல் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இரட்டை ஆண் குழந்தைகள் குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் அவர்களது பெற்றோர், உறவினர்கள் மட்டுமின்றி, கிராம மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.