செய்திகள்
போராட்டம் நடந்த பகுதி

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு - 4 பேர் பலி

Published On 2021-03-26 19:16 GMT   |   Update On 2021-03-26 19:16 GMT
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வங்காளதேசத்திற்கு சென்றுள்ளார். பிரதமர் மோடி வருகைக்கு எதிர்த்து தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
டாக்கா:

பிரதமர் நரேந்திர மோடி  2 நாள் பயணமாக நேற்று வங்காளதேசத்திற்கு சென்றுள்ளார். வங்காள தேசத்தின் 50-வது தேசிய தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்துள்ளது.

நேற்று காலை பிரதமர் மோடி  அங்குள்ள தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்றுள்ளார். கொரோனா பரவத் தொடங்கிய பிறகு அவர் கடந்த ஓராண்டாக எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை.

வங்காள தேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் அந்நாட்டின் தேசத் தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்ததையடுத்து நேற்று அவர் வங்காள தேசத்திற்குச் சென்றுள்ளார்.

நேற்று காலை வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு தனி விமானம் மூலம் சென்ற பிரதமர் மோடியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். இதனை தொடர்ந்து வங்காளதேசத்தின் தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இதற்கிடையே, பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக அந்த நாட்டின் தலைநகர் டாக்காவில் மாணவர்கள் உள்பட சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதலில் 40 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டம் தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போராட்டக்காரர்கள் அணிவகுப்பு நடத்திய நிலையில் போலீசார் அவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர்.

பிரதமர் மோடி வருகைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள்மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

போராட்டக்காரரகள் ஒரு போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடததினர். நாங்கள் அவர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகைகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களைச் சுட வேண்டியிருந்தது என போலீஸ் அதிகாரி ரபிகுல் இஸ்லாம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News