செய்திகள்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக நிர்மலாதேவி ஒப்புதல் வாக்குமூலம் - சிபிசிஐடி

Published On 2018-08-24 18:42 GMT   |   Update On 2018-08-24 18:56 GMT
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலாதேவி, விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. #NirmalaDevi #NirmalaDeviCase
சென்னை :

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவி மற்றும் உடந்தையாக இருந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர். நிர்மலா தேவி குரல் மாதிரி பரிசோதனை சென்னையில் நடத்தப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி உள்பட 3 பேரும் பலமுறை மாவட்ட மற்றும் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஜாமீன் வழங்கப்படவில்லை.

மேலும், நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த மாதம் விருதுநகர் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரியிடம் 1160 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் பேராசிரியை நிர்மலா தேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் ஆகிய 3 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம், விபசார தடுப்புச்சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிர்மலாதேவி தொடர்பான வழக்கை சிபிசிஐடி-விசாரிப்பதற்கு பதிலாக பெண் டிஐஜி தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி குலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் சிபிசிஐடி பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
 
சிபிசிஐடி விசாரனை அதிகாரியான கூடுதல் எஸ்பி லாவண்யா தாக்கல் செய்த அந்த பதில்மனுவில், ‘மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக நிர்மலாதேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். முருகன், கருப்பசாமிக்காகவே பெண்களிடம் பேசியதாக அவர் கூறியுள்ளார்’ என குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

மேலும், விசாரணைக்கு பிறகு இந்த வழக்கை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு பரிந்துரை செய்து நீதிபதி குலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. #NirmalaDevi #NirmalaDeviCase
Tags:    

Similar News