வழிபாடு
அரசலாற்றில் வள்ளியை யானை விரட்டும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

சுவாமிமலை முருகன் கோவிலில் பங்குனி திருவிழா:அரசலாற்றில் வள்ளியை யானை விரட்டும் நிகழ்ச்சி

Published On 2022-03-23 04:53 GMT   |   Update On 2022-03-23 04:53 GMT
சுவாமிமலை முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி அரசலாற்றில் வள்ளியை யானை விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அறுபடை வீடுகளில் 4-வது படை வீடாக சுவாமிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அரசலாற்றில் வள்ளியை யானை விரட்டும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்புடையதும், சிவபெருமானுக்கு முருகப்பெருமான் ஓம் என்ற பிரணவ மந்திரத்துக்கு பொருள் கூறி உபதேசம் செய்த தலமாகவும், நக்கீரரால் திருமுருகாற்றுப் படையிலும் அருணகிரிநாதரால் திருப்புகழில் வியந்து பாடிய தலமாக சுவாமிமலை முருகன் கோவில் உள்ளது.

சுவாமிமலை முருகன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18-ந் தேதி பங்குனி உத்திரத்தன்று தொடங்கியது. 21- ந்் தேதி சண்முகசுவாமி, வேடமூர்த்தி, வள்ளி நாயகியர் மற்றும் பரிவாரங்களுடன் திருவலஞ்சுழி கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அதிகாலை அரசலாற்றில் யானை விரட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதுமை வேடத்தில் இருக்கும் முருகனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி விநாயகர், யானை ரூபத்தில் வந்து வள்ளியை விரட்டும் நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது. அப்போது வள்ளி வயதான வேடத்தில் இருக்கும் முருகனை திருமணம் செய்து கொள்வதாக அமையும் திருமண காட்சி நடைபெற்றது.

இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று காலை கோவிலுக்கு முருகன், வள்ளி ஆகியோர் திரும்பினர். இரவு அலவந்திபுரத்திலிருந்து சீர்கொண்டு வந்து சுவாமிமலை கோவிலில் கல்யாணம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை உபயதாரர்களுடன் இணைந்து கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் ஜீவானந்தம், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News