ஆன்மிகம்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் முன்பு நின்று பக்தர்கள் சாமிதரிசனம் செய்ததை படத்தில் காணலாம்.

ஊரடங்கிலும் புன்னைநல்லூர் மாரியம்மனை தரிசிக்க திரண்ட பக்தர்கள்

Published On 2020-08-31 06:53 GMT   |   Update On 2020-08-31 06:53 GMT
ஊரடங்கையும் பொருட்படுத்தாத பக்தர்கள் புன்னைநல்லூர் மரியம்மனை தரிசிக்க திரண்டனர். கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லாதால் பக்தர்கள் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோவிலாகும். இங்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் பூட்டிக்கிடக்கிறது.

அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 88 கோவில்களில் ஒன்றான இக்கோவிலில் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது தனி சிறப்பாகும். இதனால் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படாமல் தைலக்காப்பு சாற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆவணி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆவணி திருவிழா தொடங்கியது. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தஞ்சை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

ஆனால் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்திற்குள் வருமானம் வரக்கூடிய கோவில்களை தவிர பிற கோவில்களை திறக்க தமிழகஅரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

நேற்று ஆவணி மாத 2-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் புன்னைநல்லூர் மாரியம்மனை தரிசிக்க அதிகாலை முதலே திரண்டனர். முழு ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் இருசக்கர வாகனங்கள், கார்கள், சரக்கு வேன்களில் பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்தனர். கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாததால், கோவிலுக்கு வெளியே நின்றபடியே சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி கோவிலின் நுழைவு பகுதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். தாங்கள் கொண்டு வந்த தேங்காய்களை உடைத்து நெய்தீபம் முன்பு வைத்து சூடம் ஏற்றி பூஜை செய்தனர். தொடர்ந்து வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த மாவு, கூழ் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர்.

முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய போலீசார் அனுமதி அளித்தனர். அவர்கள் பக்தர்களிடம் எந்தவித கெடுபிடியும் செய்யவில்லை. வரிசையாக சென்று தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள், வேப்பிலை ஆகியவற்றை கோவில் நுழைவுவாயில் முன்பு இருந்த இரும்பு கம்பியின் மீது தொங்கவிட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர், முடி காணிக்கை செலுத்தினர்.
Tags:    

Similar News