செய்திகள்
தோகைமலை அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை:
திருச்சி மாவட்டம், குழுமணி அருகே கோப்பு வடக்கு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65), கூலிதொழிலாளி. இவருடைய மனைவி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கந்தசாமி தனது சொந்த ஊரான தோகைமலை அருகே உள்ள ராசாபட்டிக்கு வந்துள்ளார். இந்தநிலையில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை கந்தசாமி குடித்துள்ளார்.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.