செய்திகள்
தற்கொலை

கும்மிடிப்பூண்டி முகாமில் இலங்கை தமிழர் தீக்குளித்து தற்கொலை

Published On 2021-04-07 09:45 GMT   |   Update On 2021-04-07 09:45 GMT
கும்மிடிப்பூண்டி முகாமில் இலங்கை தமிழர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் கிளிநொச்சியை சேர்ந்த தேவராஜ் (வயது 38). இவருக்கு மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் தேவராஜ், தனது மனைவியை கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து முகாமிலேயே தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2-ந் தேதி இரவு தேவராஜ் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தேவராஜ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இலங்கை அகதி தேவராஜின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News