செய்திகள்
ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டம் புதுவையில் அமலானது
புதுவையில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வெளிமாநிலத்தில் இருந்து புதுவைக்கு வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் உணவு தானிய மானியத்தை வங்கிக்கணக்கில் பெற முடியும்.
புதுச்சேரி:
மத்திய அரசு புலம் பெயர் மக்கள் பயன்பெற ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை அமல்படுத்தியது.
புதுவை உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. புதுவை ரேசன் கடையில் எந்த பொருளும் வழங்காத நிலையில் பிற மாநில மக்களுக்கு எதை வழங்க முடியும் என அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பின. இதனிடையே மற்ற மாநிலங்களில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. புதுவையில் இத்திட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில் திடீரென நேற்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டம் புதுவையில் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வெளிமாநிலத்தில் இருந்து புதுவைக்கு வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் உணவு தானிய மானியத்தை வங்கிக்கணக்கில் பெற முடியும். இத்திட்டத்தில் பயனடைய தொழிலாளர்கள் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளாக இருக்க வேண்டும். அவர்களுக்கு புதுவையில் ரேசன் கார்டு இருக்கக்கூடாது. அவ்வாறு வேலை செய்யும் நபர்களின் மானியத்தை மட்டும் அவர்களின் வங்கி கணக்கில் பெறலாம்.
எஞ்சிய குடும்ப உறுப்பினர்களின் உணவு தானியத்தை அவர்கள் மாநிலத்திலேயே பெறலாம். மானியம் பெற விரும்பும் தொழிலாளர்கள் கட்டண மில்லா தொலை பேசி எண்ணில் 0413 14445 தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று பதிவு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.