ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை தாயார் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை தாயார் திருவடி சேவை

Published On 2021-10-12 03:15 GMT   |   Update On 2021-10-12 03:15 GMT
இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 6-ந் தேதி தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். உற்சவத்தின் 5-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் ரத்தின கிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், பவள மாலை, அடுக்கு பதக்கம், முத்துச்சரம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.

ரெங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும். ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி ரெங்கநாச்சியார் இன்று மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கொலு மண்டபம் வந்தடைகிறார். கொலு, இரவு 7.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு முடிவடைகிறது. அங்கிருந்து இரவு 10.30 மணிக்கு ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News