செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி - கோப்புப்படம்

வைகை அணையில் இருந்து 27-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு - எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Published On 2020-09-21 22:53 GMT   |   Update On 2020-09-21 22:53 GMT
பெரியாறு, திருமங்கலம் கால்வாய் பாசன நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து 27-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் உள்ள பெரியாறு பங்கீட்டு நீர் மற்றும் பெரியாறு பாசன பகுதியில் உள்ள கண்மாய்களின் நீர் இருப்பும் சேர்த்து 6 ஆயிரம் மி.க.அடி தண்ணீர் இருந்தால் பெரியாறு பாசன பகுதியில் ஒருபோக பாசன நிலங்களுக்கு, திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் சேர்த்து பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படவேண்டும்.

இதன்படி பெரியாறு வைகை பாசனத்திற்கு தண்ணீர் வழங்கக்கோரி விவசாயிகளிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று பெரியாறு பாசன பகுதியில் ஒருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மையை மேற்கொண்டு உயர் மகசூல் பெறவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News