செய்திகள்
திருப்பூரில் பெண் போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி
போலீஸ் துறையில் கடினமான சூழ்நிலையில் சிறப்பாக பணிபுரிந்த தனது அனுபவங்களை துணை கமிஷனர் ரவி எடுத்துரைத்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர போலீஸ் சார்பில் நகரில் பணிபுரியும் பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் குடும்ப மற்றும் பணிசூழலை ஒருங்கிணைத்து செல்வது குறித்தான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
திருப்பூர் போலீஸ் கமிஷனர் வனிதா பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசுகையில்:
‘மிகுந்த கட்டுப்பாடும், ஒழுக்கமும் நிறைந்தது போலீஸ் துறை. பெண் போலீசார் எவ்வாறு கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் பணிபுரிய வேண்டும் என்பதை முதலில் அறிய வேண்டும்.
பணி மற்றும் குடும்ப சூழ்நிலைகளை ஒருங்கிணைத்து பணி ஓய்வு நேரங்களில் குடும்பத்துடன் செலவிட்டு போலீஸ் துறைக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பணிபுரிய வேண்டும்‘ என்றார். போலீஸ் துறையில் கடினமான சூழ்நிலையில் சிறப்பாக பணிபுரிந்த தனது அனுபவங்களை துணை கமிஷனர் ரவி எடுத்துரைத்தார்.
துணை கமிஷனர் அரவிந்த் வரவேற்றார். பெண் போலீசார் குடும்ப சூழல், பணிசூழலை ஒருங்கிணைத்து எவ்வாறு பணிபுரிவது என்பது தொடர்பான பயிற்சியினை டாக்டர் ரமணி வழங்கினார்.
மனநலம் மற்றும் உளவியல் தொடர்பான பயிற்சியினை மனநலம் மற்றும் உளவியல் நிபுணர் டாக்டர் மொய்தீன் வழங்கினார். போலீசாருக்கு வழங்கப்படும் விடுப்புகள், விடுப்பு விதிகள், விதிமீறி எடுக்கப்படும் விடுப்புகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பயிற்சியை மாநகர போலீஸ் அலுவலக கண்காணிப்பாளர் பரிமளா வழங்கினார்.