செய்திகள்
திருமண ஆசை காட்டி பிளஸ்-1 மாணவி கடத்தல் - வாலிபர் கைது
திருவெறும்பூர் அருகே திருமண ஆசை காட்டி பிளஸ்-1 மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவெறும்பூர்:
புதுக்கோட்டை மாவட்டம், ராப்பூசலை சேர்ந்த சந்திரசேகரின் மகன் சுபமூர்த்தி (வயது 22). இவருடைய உறவினர் வீடு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பகுதியில் உள்ளது. தனது உறவினர் வீட்டுக்கு மூர்த்தி செல்லும்போது, அந்த வீட்டின் எதிரே வசிக்கும் 16 வயதுடைய பிளஸ்-1 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இதுபற்றி மூர்த்தியின் வீட்டுக்கு தெரியவரவே, அவர்கள் மாணவியின் வீட்டுக்கு சென்று, பெண் கேட்டு உள்ளனர். ஆனால் மாணவியின் பெற்றோர் மூர்த்திக்கு தங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தாயார் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை, மூர்த்தி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவியை போலீசார் மீட்டு, மூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.