செய்திகள்
கோப்புப்படம்

பாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி

Published On 2019-10-19 06:45 GMT   |   Update On 2019-10-19 06:45 GMT
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில், பணத்திற்கு ஆசைப்பட்டு கணவனை அவரது மனைவியே வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
மாண்டியா:

ராம்கி, ஊர்வசி, குஷ்பு நடித்த படம் இரட்டை ரோஜா. இந்த படத்தில் பணக்கார பெண்ணான குஷ்புவிடம் ஊர்வசி தனது கணவர் ராம்கியை பணத்துக்காக ஆசைப்பட்டு விற்று விடுவார். இது போன்ற ஒரு சம்பவம் இப்போது உண்மையிலேயே நடந்துள்ளது.

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த திருமணமான வாலிபர் ஒருவர் மனைவியுடன் தங்காமல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் வசித்து வந்துள்ளார்.

நீண்ட காலமாகவே இருவரும் பழகிவந்த நிலையில் இந்த வி‌ஷயம் அவரது மனைவிக்கு தெரிய வந்துள்ளது. இவர்களை கண்காணித்த மனைவி கணவனை கண்டித்தார். ஆனால் கணவரோ தனது வீட்டுக்கு செல்வதையும் மனைவியுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார்.

கணவனை தேடி சென்ற மனைவி, தனது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை கையும் களவுமாக பிடித்ததார். தன்னுடன் வந்துவிடுமாறு கணவரிடம் கெஞ்சினார். அந்த நேரத்தில் பெண்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின்போது, அந்த வாலிபரின் மனைவிக்கு கடன் இருப்பதை அறிந்துகொண்ட பெண் அவரிடம் நைசாக பேச தொடங்கினார்.

“கடனை அடைக்க பணம் தருகிறேன். அதற்கு பதிலாக உன் கணவரை விட்டுத்தர வேண்டும்” என கேட்டுள்ளார். முதலில் தயங்கிய மனைவி, சிறிதுநேரத்தில் அந்த பெண்ணின் பேச்சை கேட்டு அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டார்.

தனது கணவனை விட்டு தர ரூ.17 லட்சம் கேட்டார். அவ்வளவு பணம் இல்லை என்றதும், நீண்ட பேரத்துக்கு பிறகு ரூ.5 லட்சம் வாங்கிக்கொண்டு கணவனை விற்க ஒப்புக்கொண்டார்.

அந்த பெண் ரூ.5 லட்சம் கொடுக்கவே அதை வாங்கிக்கொண்டு கணவரை திரும்ப அழைத்து தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறி தாலியை கழற்றி கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார்.
Tags:    

Similar News