செய்திகள்
உடுமலையில் வாரத்தில் 3 நாட்கள் சுற்றுலா தலங்கள் மூடப்படும் - வனத்துறையினர் தகவல்
வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே சுற்றுலா தலங்களுக்கு அனுமதியளிக்கப்படும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையையடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் பூங்கா, ராக் கார்டன், முதலைப்பண்ணை என சுற்றுலா பயணிகளை கவர கூடிய இடங்கள் உள்ளன.
இங்கு வெளிமாவட்டம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
பின்னர் தொற்று குறைந்தநிலையில் திறக்கப்பட்ட சுற்றுலாதலங்கள் மீண்டும் தொற்று அதிகரிப்பால் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியது. இதை நம்பியிருந்த தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இன்றி தவித்தனர்.
தற்போது ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் உடுமலையில் சுற்றுலா தலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டன. ஆனால் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே சுற்றுலா தலங்களுக்கு அனுமதியளிக்கப்படும்.
வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா தலங்கள் மூடப்படும். அன்றைய நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது. தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. யாரும் வந்து ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.