செய்திகள்
ராமதாஸ்

ரெயில்களை தனியார் மயமாக்கக்கூடாது- ராமதாஸ் அறிக்கை

Published On 2019-09-25 08:26 GMT   |   Update On 2019-09-25 08:26 GMT
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு தொடர்வண்டிகளை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் அதிகம் பேர் பயணிக்கும் தொடர்வண்டி வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் தொடர் வண்டி சேவைகளை வழங்கும் தெற்கு தொடர்வண்டித்துறை உள்ளிட்ட மொத்தம் 6 தொடர்வண்டி மண்டலங்களின் தலைமை இயக்க மேலாளர்களுக்கு இந்திய தொடர்வண்டி வாரியம் அனுப்பியுள்ள 23.09.2019 தேதியிட்ட சுற்றறிக்கையில் தான் தொடர்வண்டிகளை தனியார்மயமாக்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து மதுரை, கோவை, பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்லும் வழித்தடங்கள் உள்ளிட்ட 150 வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ள தொடர்வண்டி வாரியம், அவற்றில் எந்தெந்த வழித்தடங்களில் தனியார் தொடர்வண்டிகளை இயக்க அனுமதிக்கலாம் என்பது குறித்த கருத்துகளை தெரிவிக்கும்படி மண்டல தொடர்வண்டித்துறை நிர்வாகங்களைக் கேட்டிருக்கிறது.

தில்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பெறப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளிகள் தயாரிக்கப்பட்டு, தொடர் வண்டி வழித்தடங்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலன் சார்ந்த கோணத்தில் பார்க்கும் போது இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

இது இந்தியாவின் முக்கியமான போக்குவரத்து முறையை தலைகீழாக சிதைக்கும் நோக்கம் கொண்டதாகவே அமையும். தொடர்வண்டிப் பாதைகளை தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலம் அவர்கள் பயணிகளின் தேவைக்கு ஏற்ப அதிக எண்ணிக்கையில் தொடர்வண்டிகளை இயக்குவார்கள்; மணிக்கு 160 கி.மீ வேகத்தில் தொடர்வண்டிகள் இயக்கப்படும்; நவீன வசதிகள் கொண்ட தொடர்வண்டிகள் அறிமுகப்படுத்தப்படும்; இதனால் பயணிகள் மிகவும் விரைவாகவும், மகிழ்ச்சியாகவும் பயணிக்க முடியும் என்று தொடர்வண்டி வாரியம் கூறியுள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பேருந்துக் கட்டணத்தை விட தொடர்வண்டிக்கட்டணம் குறைவாக உள்ளது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இன்னும் கட்டணம் குறைவு என்பதால், அவை ஏழைகளிலும் ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளன. தனியார் தொடர்வண்டிகளில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இருக்காது என்பதாலும், சாதாரண வகுப்புக் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்படும் என்பதாலும் ஏழைகளுக்கு தொடர்வண்டி பயணம் என்பது எட்டாக்கனியாகி விடும். சென்னை, மும்பை, கொல்கத்தா, செகந்திராபாத் ஆகிய நகரங்களின் புறநகர் தொடர்வண்டிகளும் தனியார்மயமாக்கப்படும் என்பதால் குறைந்த கட்டணத்தில் புறநகர் தொடர்வண்டிகள் மூலம் அன்றாடம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 3 மடங்கு அளவுக்கு கட்டணம் உயர்த்தப்படும். புறநகர் தொடர்வண்டிகளில் பயணிப்பவர்கள் மாதம் ரூ.2000 வரை கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும்.

நூற்றுக்கணக்கான தொடர் வண்டிகள் தனியார் மயமாக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகும் அல்லது அந்த பணியிடங்கள் ஒழிக்கப்படக்கூடும்.

பாராளுமன்ற மக்களவையில் தொடர்வண்டித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள், தொடர்வண்டித்துறை ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என்று உத்தரவாதம் அளித்திருந்தார்.

அவ்வாறு உத்தரவாதம் அளித்து 75 நாட்கள் கூட ஆகாத நிலையில் தொடர்வண்டிகளை தனியார்மயமாக்கத் துடிப்பது நியாயம் அல்ல. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு தொடர்வண்டிகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News