செய்திகள்
மணிகண்டன் - இளமதி

வாழப்பாடி அருகே கணவரை அடித்துக்கொன்ற அரசு பள்ளி ஆசிரியை

Published On 2021-08-02 03:40 GMT   |   Update On 2021-08-02 03:40 GMT
வாழப்பாடி அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரை உருட்டுக் கட்டையால் அரசு பள்ளி ஆசிரியை தீர்த்துக்கட்டினார்.
வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்த சித்தன் மகன் மணிகண்டன்(வயது 35), இவருடைய மனைவி இளமதி(30). இவர்களுக்கு தக்சிந்த்(10) என்ற மகனும், அக்சிதா (6) என்ற மகளும் உள்ளனர். இளமதி, வி.மன்னார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

மணிகண்டனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவி, பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்று மாலை 6 மணி அளவில் மணிகண்டன் வழக்கம் போல் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவியிடம் தகராறு செய்ததாகவும், அதனை பொருட்படுத்தாமல் இளமதி பொறுமையாக இருந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் மணிகண்டன், மனைவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. கணவரின் சித்ரவதை தாங்காத இளமதி, வீட்டுக்கு வெளியே கிடந்த உருட்டு கட்டையை எடுத்து ஆத்திரத்தில் கணவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இந்த கொலை தொடர்பாக வாழப்பாடி போலீசார் ஆசிரியை இளமதியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

எம்.பில் பட்டதாரியான மணிகண்டனும், எம்.ஏ., பி.எட் பட்டதாரியான இளமதியும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் பக்கத்து பக்கத்து ஊர் மற்றும் ஒரே கல்லூரியில் படித்ததாகவும் தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் மணிகண்டனுக்கு, சென்னையில் அரசு பூம்புகார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சில நாட்களில் அலுவலகத்தில் ஏதோ பிரச்சினை தொடர்பாக மணிகண்டன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தினமும் கணவர் மதுபோதையில் தகராறு செய்வதும், தாக்குவதுமாக இருந்தது இளமதிக்கு வேதனையை தந்துள்ளது. நேற்று கணவரின் செயல் அத்துமீறவே ஆத்திரம் அடைந்த இளமதி அவரை தாக்கியதாக தெரிகிறது. அவரது ஆத்திரம் கணவரது உயிரை பறித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் வாழப்பாடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News