செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2021-10-07 03:37 GMT   |   Update On 2021-10-07 03:37 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:

கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து தமிழக-கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது.

ஒகேனக்கல்லில் தற்போது 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி,சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சாகமாக சென்று இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 12 ஆயிரத்து 118 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 12 ஆயிரத்து 168 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் 1000 கன அடியாக குறைக்கப்பட்டது. கால்வாயில் 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 75.63 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர்ந்து இன்று 76.48 அடியானது. இனி வரும் நாட்களில் நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News