செய்திகள்
ஜிகே வாசன்

விவசாயிகள் அனைவரும் கூட்டுறவு வங்கி உறுப்பினராக நடவடிக்கை தேவை- ஜி.கே.வாசன்

Published On 2021-06-23 06:04 GMT   |   Update On 2021-06-23 06:04 GMT
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் அரசியல் புகுந்து முறையான கூட்டுறவு இயக்கமாக நடைபெறவில்லை என ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கூட்டுறவு அமைப்பானது பயனாளிகள் ஒன்று கூடி மக்களாட்சி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தங்களுக்கும், சமுதாயத்திற்கும் முழுமையாக சேவை செய்யக்கூடிய சட்டத்திட்டங்களால் உருவாக்கப்பட்டதுதான் கூட்டுறவு அமைப்பாகும்.

ஆனால் இன்று தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் அரசியல் புகுந்து முறையான கூட்டுறவு இயக்கமாக நடைபெறவில்லை. தற்பொழுது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு இல்லாமலும், வெளிப்படை தன்மை இல்லாமலும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே உறுப்பினராக சேரும் வகையில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் புதிய உறுப்பினர்களாக விவசாயிகள் சேர்வதற்காக வேளாண் வங்கிகளில் விண்ணப்பம் கேட்டால் வங்கி ஊழியர்கள் விண்ணப்பம் இல்லை என்கிறார்கள். கூட்டுறவு சங்கத்தில் அனைவரும் இணைவதுதான் கூட்டுறவு அமைப்பின் கொள்கையாகும்.

ஆகவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லாமல் வெளிப்படை தன்மையோடு அனைவரும் உறுப்பினர் ஆகும் வகையில் மூன்று மாதகாலம் அவகாசம் அளிக்க வேண்டும். அந்தந்த கூட்டுறவு சங்கங்களிலேயே விண்ணப்பங்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றார்.

Tags:    

Similar News