செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 26.34 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் நடந்த முகாம்களில் வரிசையில் காத்திருந்து பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த 11 மெகா தடுப்பூசி முகாம்களில் 17 லட்சத்து 35 ஆயிரத்து 628 ஆண்கள், 8லட்சத்து 20 ஆயிரத்து 798 பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. நேற்று 12ம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டத்தின் 645 பகுதிகள், 41 நடமாடும் முகாம்களில் நடந்தது.
தடுப்பூசி செலுத்தும் பணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 2,580 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். வாரத்தின் இரு நாட்கள் முகாம் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழன் அன்று நடந்த முகாமில் ஒரு லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பாதிக்கும் குறைவாக 43 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.
விடுமுறை தினமான நேற்று தடுப்பூசி முகாம்களில் கூட்டம் காணப்பட்டது. பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் நடந்த முகாம்களில் வரிசையில் காத்திருந்து பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் 67 ஆயிரத்து 621 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 26.34 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.