செய்திகள்
கோப்பு படம்

மதுபாட்டிலை உடைத்த தகராறில் ஆட்டோ டிரைவர் கொலை

Published On 2020-01-14 09:49 GMT   |   Update On 2020-01-14 09:49 GMT
வேலூர் சைதாப்பேட்டையில் மதுபாட்டில் உடைத்ததால் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் தோட்டப்பாளையம் புதுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ். அவருடைய மகன் அய்யப்பன் (வயது 29). ஆட்டோ டிரைவர்.

இவர் நேற்று மாலை சைதாப்பேட்டை முருகன் கோவில் பின்புறம் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் முன் நின்று கொண்டிருந்தார் .

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார். அய்யப்பன் அவர்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார். அவரை மர்ம கும்பல் விரட்டி கத்தியால் குத்தினர்.

இதில் அய்யப்பன் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தார். இதைத் தொடர்ந்து மர்ம கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர் சைதாப்பேட்டை முருகன் கோவில் பின்புறம் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுகிறது.

மது விற்பனையாளர்கள் நேரடியாக களமிறங்காமல் மூதாட்டியை வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அய்யப்பன் மது விற்பனை செய்யும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது சைதாப்பேட்டையை சேர்ந்த 2 வாலிபர்கள் மூதாட்டியிடம் மது வாங்கினர்.

அவர்கள் மது வாங்கிய போது பாட்டில் தவறிக் கீழே விழுந்து உடைந்தது. இதனால் அவர்கள் மூதாட்டியிடம் தகராறு செய்தனர்.

அப்போது அய்யப்பன் மூதாட்டிக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனையடுத்து அவருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதன் காரணமாக அய்யப்பன் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.இதுதொடர்பாக போலீசார் சைதாப்பேட்டையை சேர்ந்த வாலிபர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News