வழிபாடு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அதிசயங்களும், ரகசியங்களும்...

Published On 2021-12-14 05:04 GMT   |   Update On 2021-12-14 05:04 GMT
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரால் கட்டமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள 1,000 தூண்களும் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் போய் விட்டது.
வைணவர்களின் திருத்தலமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பல்வேறு அதிசயங்களையும், ரகசியங்களையும் தாங்கி நிற்கிறது. அதன் தொகுப்பு இதோ...

* திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்றது. 108 வைணவ திருத்தலங்களில் தலைமை செயலகம் போல் செயல்படுகிறது.

* பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், மங்களாசாசனம் பெற்று பாடிய திருத்தலமாகும்.

* 108 வைணவ திருத்தலங்களில் இரண்டு திருத்தலங்கள், பூமியில் இல்லை. ஒன்று பரமபதம், மற்றொன்று திருப்பாற்கடல்.

* இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோவில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.

* 1961-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கின்படி இங்கு 42 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். தற்போது, இதன் மக்கள் தொகை 5 லட்சத்தை தாண்டி விட்டது.

* கோவில், நாழிக்கேட்டான் வாயில் வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர்.

* கோவிலின் உட்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி, மகாவிஷ்ணுவுக்கு உரியவராக முறையே சங்கு, தாமரை வடிவங்களில், `சங்க நிதி', `பதும நிதி' உருவங்களுடன் இருக்கின்றனர்.

* விஜயரங்க சொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை முறையில், வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளன.

* மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகளுக்காக அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

* மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதில் கோவில் பணியாளரைக் கொண்டு இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்டதைலக்காப்புடன் மெருகூட்டப்படுகிறது.

* கோவில் கருவறையின்மேல் தங்க தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வன வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.

* இந்த கோவிலுக்கு வந்து ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்க நாச்சியார் ஆகியோர் ரெங்கநாதரின் திருவடியை அடைந்து உள்ளனர்.

* வருடத்துகொருமுறை, பங்குனி உத்திர நாளில் பெருமாளும், தாயாரும். தாயார் சன்னதியில் இருக்கும் சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

* கோவிலில் உள்ள நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும்.

* பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரால் கட்டமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள 1,000 தூண்களும் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் போய் விட்டது. 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 49 தூண்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் காலத்தில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களுடன் விழா நடைபெறுகிறது.
Tags:    

Similar News