செய்திகள்
கோப்பு படம்

இடி, மின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் - புதுக்கோட்டை கலெக்டர் வேண்டுகோள்

Published On 2019-10-19 15:41 GMT   |   Update On 2019-10-19 15:41 GMT
இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ மரத்தடியிலோ உயர் மின் கோபுரங்கள் மற்றும் இரும்பு வேலிகளின் அருகில் நிற்பதோ, தங்குவதையோ தவிர்க்க வேண்டும் என புதுக்கோட்டை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பருவமழை காலங்களில் இடி, மின்னல் போன்ற இயற்கை அபாயங்கள் ஏற்படும் போது தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பொதுமக்கள் கையாண்டு மனித உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு மற்றும் உடமைகளுக்கு ஏற்படக்கூடிய சேதங்களை தவிர்த்திட வேண்டும்.

பொதுமக்கள் இடி, மின்னல் ஏற்படும் சமயங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பயணத்தை தவிர்க்க வேண்டும். வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.

குழந்தைகள் வீடுகளில் உள்ளனரா என்பதையும், வளர்ப்பு பிராணிகள் கொட்டிலில் உள்ளனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் வீட்டில் உள்ள மின் மற்றும் மின்னணு சாதனங்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளனவா என உறுதி செய்தல் வேண்டும். இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ மரத்தடியிலோ உயர் மின் கோபுரங்கள் மற்றும் இரும்பு வேலிகளின் அருகில் நிற்பதோ, தங்குவதோ கூடாது.

கால்நடைகளை மரத்தில் கட்டுவதையோ, வெளியில் மேய்ச்சலுக்கு விடுவதையோ தவிர்க்க வேண்டும். இடி, மின்னலின் போது மின்னணு சாதனங்களை அறவே பயன்படுத்துதல் கூடாது. இடி, மின்னலின் போது மேற்கூரை வேயப்பட்ட கட்டிடங்களின் கீழ் ஒதுங்க வேண்டும். மிக உயரமான பகுதிகளில் உள்ள கட்டிடங்களின் கீழ் தங்குவதை தவிர்க்க வேண்டும். ஆறுகள், குளங்கள் நீர் நிலைகளில் சிறுவர்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

இரும்பு கொடிகம்பம், டி.வி. டிஸ் ஆண்டனா, செங்குத்தான உலோகங்களினாலான சாதனங்களின் அருகில் நிற்கக்கூடாது. இரு சக்கர வாகனங்களில் (சைக்கிள் உள்பட) செல்வதை தவிர்க்க வேண்டும். உலோகத்தினாலான குடை மற்றும் பொருட்களை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் காய்ச்சி வடிகட்டிய நீரை பருக வேண்டும். பொது சுகாதாரத்தை பேணி காக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வப்போது வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகளை கவனத்தில் கொண்டு அதன்படி பொது மக்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News