செய்திகள்
ஒரே நாளில் 13 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- ஆந்திரா புதிய சாதனை
இன்று 1 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்ட விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
ஐதராபாத்:
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களுக்கு விரைவாக கொரோனா தடுப்பூசி போடுவதற்காக இன்று மெகா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் 12000 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இரவு 8 மணி நிலவரப்படி இன்று ஒரே நாளில் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி திட்டத்தில் ஆந்திர அரசு புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு ஒரே நாளில் 6 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்திருந்தது.
இதுதொடர்பாக ஆந்திர அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசு தடுப்பூசிகளை தொடர்ந்து வழங்கினால், மருத்துவ குழுவினர் மற்றும் பிற ஊழியர்கள் இணைந்து ஒரு நாளைக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்த முடியும் என்று காட்டியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனை, என்று கூறி உள்ளது.
மேலும், இன்று 1 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்ட விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: மாநிலங்களுக்கு 52 லட்சம் தடுப்பூசி - 3 நாளில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை
ஆந்திராவில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி உள்ளது. முதல் டோசை 1.06 கோடி பேரும், 27.02 லட்சம் பேர் இரண்டாவது டோசும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 5646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 50 பேர் உயிரிழந்துள்னர். 7772 பேர் குணமடைந்துள்ளனர்.