செய்திகள்
கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் கான்பூரில் கங்கை நதியில் பிரதமர் நரேந்திர மோடி படகில் பயணம் செய்த காட்சி

கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார் - 45 நிமிடங்கள் படகில் பயணம்

Published On 2019-12-14 20:36 GMT   |   Update On 2019-12-14 20:36 GMT
கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார். கான்பூரில் அவர் கங்கை நதியில் படகில் பயணம் செய்த காட்சி.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சந்திரசேகர் ஆசாத் பல்கலைக்கழகத்தில் கங்கையை சுத்தப்படுத்துவது தொடர்பான அனைத்து திட்டங்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இந்த திட்டத்தின் தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பீகார் துணை முதல்-மந்திரி சுஷில் மோடி, உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரிவேந்திரசிங் ராவத் மற்றும் சில மத்திய, மாநில மந்திரிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்வதற்காகவும், புதிய நடவடிக்கைகள் எடுப்பதற்காகவும் இந்த கூட்டம் கூட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அதற்கான முயற்சிகள் ஆகியவற்றை பாராட்டியதாகவும், கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான உறுதியை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி கங்கை நதியில் சுமார் 45 நிமிடங்கள் மிதவை படகில் பயணம் செய்தார். அப்போது கங்கையில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறதா? என்பதை நேரில் கண்காணித்தார். அடல் காட் என்ற பகுதியை அடைந்ததும் அங்கு அமைக்கப்பட்டு இருந்த தூய்மையான கங்கை திட்டம் தொடர்பான கண்காட்சியை பார்வையிட்டார்.

அதேசமயம் எதிர்க்கட்சிகள் கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை குறை கூறியுள்ளன. சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் டுவிட்டரில், “பிரதமர் வருகைக்கு முன்பே சில கழிவுநீர் கால்வாய்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் உண்மைநிலை வேறாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் விகாஸ் அஸ்வதி கூறும்போது, “கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு அரசு அதிகமான நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் சிறப்பாக செயல்படுவதாகவும் அரசு கூறுகிறது. ஆனால் உண்மைநிலை வேறு. காற்று மற்றும் தண்ணீரின் மாசுபாடு அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளது. திட்டத்தின் முன்னேற்றம் காகிதத்தில் மட்டும்தான் உள்ளது” என்றார்.

பிரதமரின் இந்த பயணத்தின்போது எதிர்க்கட்சியினர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘திரும்பிப்போ மோடி’ என்ற பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News