பால் தினகரனுக்கு சொந்தமான அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் அரசியல் இல்லை- பாஜக மாநில பொதுச்செயலாளர் பேட்டி
நிலக்கோட்டை:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் நிலக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க ஆட்சியில் இருந்தபோது மக்கள் கிராமசபை கூட்டத்தை நடத்தாமல் தற்போது ஸ்டாலின் ஊர்ஊராக சென்று கிராமசபை கூட்டம் நடத்தி மக்களிடம் மனுக்கள் வாங்குகிறார். இதனால் யாருக்கு என்ன பயன். கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதிலும் சிலர் அரசியல் செய்ய நினைக்கின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் தானாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அதேபோல பா.ஜ.க நிர்வாகிகளும் தடுப்பூசி போட்டுக்கொள்வோம்.
கிறிஸ்தவ மதபோதகர் பால்தினகரன் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது அரசியல் தலையீடு இல்லை. அவர் குற்றமற்றவர் என்பது உண்மையானால் நீதிமன்றத்தை நாடி நிரூபிக்கலாம்.
இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அப்போது ராகுல்காந்தி வாய் திறக்கவில்லை. தற்போது தமிழர்களுக்காக வாதாடி வருகிறார். இலங்கை மீனவர்களால் 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பா.ஜ.க தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. அ.தி.மு.க தலைமையில் எங்களது கூட்டணி வலுவாக உள்ளது.
இக்கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.